உருவாகிறது 'மாயவன்' 2-ம் பாகம்: சி.வி.குமார் இயக்குகிறார்

By செய்திப்பிரிவு

'மாயவன்' படத்தின் 2-ம் பாகத்தை இயக்கி, தயாரிக்க முடிவு செய்துள்ளார் சி.வி.குமார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமான படம் 'மாயவன்'. சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு உருவான இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார்.

இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் உருவான படம் என்பதால், சி.வி.குமாருக்கு நஷ்டமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் கடந்து வந்துள்ளார் சி.வி.குமார்.

தற்போது 'டைட்டானிக்', 'கொற்றவை', 'இன்று நேற்று நாளை 2', 'சூது கவ்வும் 2' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறார் சி.வி.குமார். இதில் 'இன்று நேற்று நாளை 2' மற்றும் 'சூது கவ்வும் 2' ஆகிய படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'மாயவன்' படத்தின் 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி வருவதாக சி.வி.குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ட்விட்டர் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:

"எங்களுக்கு மிகவும் பிடித்த 'மாயவன்' நிலத்தின் மீது இறங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். பார்வையாளர்களின் அளப்பரிய பாராட்டும் ஆதரவுமே மாயவன் இரண்டாம் பாகமான 'மாயவன் ரீலோடட்' படத்தை எடுக்கும் மிகப்பெரிய முயற்சியைத் தூண்டியது. ஏப்ரல் 14-ம் தேதி இதர அப்டேட்கள் இருக்கும்".

இவ்வாறு சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE