வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன்? - விஜய் தரப்பு விளக்கம்

By செய்திப்பிரிவு

விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன் என்று அவருடைய தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, எந்தவித சிக்கலுமின்றி நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

திரையுலகப் பிரபலங்களில் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்துவிட்டார்கள். இதில் நடிகர் விஜய் தன்னுடைய வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தான் மறைமுகமாக விஜய் சொல்கிறார் எனப் பலரும் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இதை முன்வைத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவைச் சேர்ந்த குஷ்பு உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சைக்கிளில் சென்று வாக்களித்ததை வைத்து அரசியல் ரீதியான கருத்துகள் பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"விஜய் சைக்கிளில் ஒட்டுப் போட வந்ததிற்கு ஒரே ஒரு காரணம் தான். வாக்குப்பதிவு மையம் அவருடைய வீட்டிற்குப் பின்புறம் உள்ள தெருவில் இருக்கிறது. அது ஒரு சின்ன தெரு என்பதால் காரில் சென்று வருவது இடைஞ்சலாகவும் இருக்கும். ஆகையால் தான் அவர் சைக்கிளில் வந்தார். இதைத்தவிர வேறு எந்தவொரு காரணமும் கிடையாது"

இவ்வாறு விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE