செல்ஃபியால் கோபம்; ரசிகரிடம் பறித்த செல்போனை திருப்பியளித்த அஜித்

By செய்திப்பிரிவு

செல்ஃபியால் கோபமடைந்து ரசிகரின் செல்போனை பறித்த அஜித், சிறிது நேரத்தில் அந்த ரசிகரிடமே திருப்பி ஒப்படைத்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

திரையுலக பிரபலங்களில் அஜித் முதல் நபராக வாக்குச்சவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அஜித் வாக்களிக்க வந்தபோது, அவருக்கு அருகில் காவல்துறையினர் வர சற்று தாமதமானது. அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்கக் கூடினார்கள். அஜித் அவர்களைக் கோபமாக முறைக்கவே ரசிகர்கள் சிலர் திரும்பிச் சென்றார்கள். அப்போது இன்னொருபுறம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க மொபைல் போனுடன் அவர் அருகில் வந்தார். அப்போது அவருடைய போனை பறித்துவிட்டார் அஜித்.

அஜித்தின் இந்தச் செயலால் ரசிகர் அதிர்ச்சியடைந்தார். காவல்துறையினர் ரசிகர்கள் அனைவரையும் வெளியேற்றினார்கள். வாக்களிக்க நின்று கொண்டிருக்கும் போது, தனது பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை ரசிகரை அழைத்துக் கொடுத்துவிட்டார் அஜித். அப்போது, இந்த இடங்களில் செல்ஃபி எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

பின்பு அஜித்துக்கு உடல் வெப்பப் பரிசோதனை எல்லாம் எடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு அஜித் காருக்கு ஏற நடந்து செல்லும் போது நின்று கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள், ரசிகர்கள் அனைவரிடமும் 'ஸாரி... ஸாரி... நன்றி' என்று கூறிவிட்டுச் சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE