'ராக்கெட்ரி' காட்சிகளைப் பாராட்டிய பிரதமர் மோடி: மாதவன் பகிர்வு

'ராக்கெட்ரி' திரைப்படத்தின் காட்சிகளைப் பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியதாக படத்தின் நாயகன் மற்றும் இயக்குநர் மாதவன் பகிர்ந்துள்ளார்.

மாதவன் இயக்கி, நடித்துள்ள படம் 'ராக்கெட்ரி'. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் மாதவன். ஏப்ரல் 1 அன்று ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் 'ராக்கெட்ரி' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இதற்குத் திரையுலகின் பிரபலங்கள் பலர் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். தற்போது ராக்கெட்ரி திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசியது குறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

"சில வாரங்களுக்கு முன் நம்பி நாராயணனும், நானும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் கவுரவத்தைப் பெற்றோம். 'ராக்கெட்ரி' திரைப்படத்தைப் பற்றிப் பேசினோம். படத்தின் காட்சிகள் குறித்தும், நம்பி நாராயணனுக்கு ஏற்பட்ட அநீதி குறித்தும் பிரதமர் பேசிய வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்துவிட்டோம். இந்த கவுரவத்துக்கு நன்றி" என்று மாதவன் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் இந்தப் படத்தில் நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் சூர்யாவும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஷாரூக் கானும் கவுரவ வேடங்களில் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE