வார்த்தைகளில் கண்ணியத்தைக் கடைப்பிடியுங்கள்: விமர்சகர்களுக்கு 'சுல்தான்' தயாரிப்பாளர் வேண்டுகோள்

வார்த்தைகளில் கண்ணியத்தைக் கடைப்பிடியுங்கள் என்று 'சுல்தான்' விமர்சனம் தொடர்பாக எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, லால், யோகி பாபு, நெப்போலியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, நேற்று (ஏப்ரல் 2) வெளியானது.

கலவையான விமர்சனங்கள் பெற்று வந்தாலும், நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 'சுல்தான்' படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எங்களுக்கு மிகப்பெரிய ஆரம்ப வசூலைக் கொடுத்ததில் மகிழ்ச்சி. கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. கார்த்திக்கு இதுவரை வெளியான படங்களில் அதிகபட்ச முதல் நாள் வசூல் 'சுல்தான்' தான். இந்தக் கடினமான காலகட்டத்தில் ஒட்டுமொத்தத் திரைத்துறைக்கும் நிவாரணம் போல அமைந்துள்ளது. அரங்கு நிறைந்த காட்சிகள் எங்கள் மனதில் மகிழ்ச்சியை நிறைக்கின்றன. மீண்டும் நன்றி.

எங்கள் பல திரைப்படங்களை விமர்சகர்கள் ஆதரித்திருக்கின்றனர். அவர்களுக்கு என்றுமே நன்றியுடன் இருப்பேன். சிலருக்கு 'சுல்தான்' குறித்து வேறு அபிப்ராயங்கள் இருக்கலாம். நான் அதை மதிக்கிறேன். ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளில் கண்ணியத்தைக் கடைப்பிடியுங்கள். ஏனென்றால் திரைப்படங்களும், ரசிகர்களும்தான் நீங்கள் உண்ணும் உணவுக்குக் காரணமாக இருக்கிறார்கள்”.

இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE