அதர்வா நடித்து வரும் படத்துக்காக ஒரே ஷாட்டில் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.
'100' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக தான்யா ரவிச்சந்திரன், அதர்வா அப்பா கதாபாத்திரத்தில் அருண் பாண்டியன் ஆகியோர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள்.
'மாறா' படத்தை தயாரித்த பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்காக ஒரே ஷாட்டில் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். இந்திய திரையுலகில் இதுவரை யாருமே இம்மாதிரியான முயற்சிகளைச் செய்ததில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த சண்டைக் காட்சியை திலீப் சுப்பராயன் வடிவமைத்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் கூறியிருப்பதாவது:
"இது எனது நீண்ட நாள், கனவு முயற்சி. நானும் திலீப் சுப்பராயன் மாஸ்டரும், பல காலம் முன்பாகவே, இப்படி ஒரு ஆக்சன் காட்சியை எடுக்க திட்டமிட்டோம். இப்படத்தில் அந்த கனவு நிறைவேறியுள்ளது. அதுவும் அதர்வா போன்ற நாயகன் அமைந்ததால் தான் இது சாத்தியமானது.
சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியைத் திட்டமிட்டு எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. திட்டமிட்ட பிறகு ஒரு நாள் மட்டுமே நாங்கள் ரிகர்சல் செய்தோம். படக்குழுவினரின் உழைப்பால் இந்த சண்டைக் காட்சி அற்புதமாக வந்துள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு அதர்வா இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக மாறிவிடுவார்"
இவ்வாறு இயக்குநர் சாம் ஆண்டன் தெரிவித்துள்ளார்.