முத்தையா இயக்கத்தில் நடிக்கவிருப்பதை கார்த்தி தனது பேட்டியில் உறுதி செய்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கொம்பன்'. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அதற்குப் பிறகு, தற்போது முத்தையா - கார்த்தி கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது. இது தொடர்பான செய்திகள் வெளியானாலும் அதிகாரபூர்வமாக யாருமே உறுதிப்படுத்தாமல் இருந்தார்கள்.
இந்நிலையில், 'சுல்தான்' படத்தை விளம்பரப்படுத்த கார்த்தி பேட்டியளித்துள்ளார். அதில் முத்தையா இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறித்தும், அது 'கொம்பன் 2' படமா என்ற கேள்விக்கும் கார்த்தி பதில் அளிக்கையில், " 'கொம்பன் 2' எல்லாம் கிடையாது. அது புதிய கதை" என்று தெரிவித்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் உருவாகும் படத்திலும், மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் கார்த்தி. இதில் மித்ரன் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும், முத்தையா படத்தை 2டி நிறுவனமும் தயாரிக்கவுள்ளது.