மம்மூட்டி எடுத்த புகைப்படங்கள் பொக்கிஷம்: மஞ்சு வாரியர் பகிர்வு

By செய்திப்பிரிவு

நடிகர் மம்மூட்டி தன்னை எடுத்த புகைப்படங்கள் பொக்கிஷம் என்று நடிகை மஞ்சு வாரியர் பகிர்ந்துள்ளார்.

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி, புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் ஊரடங்கு சமயத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். தொழில்முறை புகைப்படக் கலைஞரைப் போல இவர் எடுத்திருந்த புகைப்படங்கள் பலரது பாராட்டைப் பெற்றன.

அண்மையில் 'தி ப்ரீஸ்ட்' என்கிற திரைப்படத்தில் மம்மூட்டி நடித்தார். இதில் முதல் முறையாக நடிகை மஞ்சு வாரியர் மம்மூட்டியுடன் சேர்ந்து நடித்தார். இந்தப் படப்பிடிப்பில் மஞ்சு வாரியரின் புகைப்படங்களை மம்மூட்டி எடுத்துள்ளார்.

இந்தப் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சு வாரியர் தற்போது பகிர்ந்துள்ளார். "இந்தப் புகைப்படங்களை எடுத்தது, மலையாள சினிமாவின் மூத்த புகைப்படக் கலைஞர் மம்மூக்காவைத் தவிர வேறு யாருமில்லை. இது ஒரு பொக்கிஷம். மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் 'தி ப்ரீஸ்ட்' வெளியானது. இந்த வாரம் மம்மூட்டி நடிப்பில் 'தி ஒன்' என்கிற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE