யுவன், அனிருத், ஜி.வி.பிரகாஷ் - இசை சூப்பர் ஸ்டார்கள்: புகழாரம் சூட்டிய ஏ.ஆர். ரஹ்மான் 

By செய்திப்பிரிவு

யுவன், அனிருத், ஜி.வி.பிரகாஷ் அனைவரும் இசை சூப்பர் ஸ்டார்கள் என ஏ.ஆர். ரஹ்மான் புகழாரம் சூட்டியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘99 ஸாங்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன், அனிருத், ஜி.வி.பிரகாஷ், முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, முன்னணி இயக்குநர்கள் ஷங்கர், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது:

''தமிழ்நாட்டில் பிறந்து பின்பு வட இந்தியாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்து, அதன் பின்னர் லண்டனில் ‘பாம்பே ட்ரீம்ஸ்’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னிடம் நிறைய பேர் ‘உன்னிடம் ஏதாவது கதை இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். ஏன் நாம் ஒரு கதை எழுதக் கூடாது என்று தோன்றியது. அதன் பிறகு நிறைய கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

5, 6 வருடங்கள் சில பயிற்சிப் பட்டறைகளில் எல்லாம் கலந்துகொண்டேன். அதன் பிறகு இந்தக் கதை கிடைத்தது. இந்தக் கதையைச் சொன்னபோது பலருக்கும் இது பிடித்திருந்தது. கதை முழுமை அடைந்ததும் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவரை இயக்குநராக ஒப்பந்தம் செய்தோம். 750 ஆடிஷன்களுக்குப் பிறகு இஹானை நாயகனாகத் தேர்வு செய்தோம். இப்படத்தில் நாயகனுக்கு ஜி.வி.பிரகாஷும், நாயகிக்கு என் மகள் கதீஜாவும் குரல் கொடுத்துள்ளார்கள்.

யுவன், அனிருத், ஜி.வி.பிரகாஷ் அனைவரும் இசை சூப்பர் ஸ்டார்கள். நான் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். இவர்கள்தான் என்னை ஊக்கப்படுத்துகின்றனர். நமக்கு வயதாகும்போது இளம் தலைமுறையினரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்''.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE