மாதவனுக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

முன்னணி நாயகனாக வலம் வரும் மாதவனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் பல பாலிவுட் பிரபலங்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஏற்கனவே கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (மார்ச் 24) பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஆமிர் கானுக்கு கரோனா தொற்று உறுதியானது.

தற்போது தனக்கு கரோனா தொற்று இருப்பதை மாதவன் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக மாதவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ரான்ச்சோவை ஃபர்ஹான் தொடர்ந்து சென்று தான் ஆக வேண்டும். வைரஸ் என்றுமே எங்களைத் துரத்தியிருக்கிறார். இம்முறை அவர் எங்களைப் பிடித்து விட்டார். ஆனால் எல்லாம் நலமாக இருக்கிறது. விரைவில் கோவிட் கிணற்றில் கிடக்கும். இந்த இடத்தில் மட்டும் தான் ராஜு இருக்க வேண்டாம் என்று நினைக்கிறோம். உங்கள் அத்தனை அன்புக்கும் நன்றி. நான் நன்றாகத் தேறி வருகிறேன்”

இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டை '3 இடியட்ஸ்' படத்தின் கதாபாத்திரங்களை முன்வைத்து மாதவன் வெளியிட்டுள்ளார். ரான்ச்சோ 3 இடியட்ஸ் திரைப்படத்தில் ஆமிர் கான் கதாபாத்திரத்தின் பெயர். அவரது உயிர் நண்பராக நடித்த மாதவன் கதாபாத்திரத்தின் பெயர் ஃபர்ஹான். ஆமிர் கானுக்கு கரோனா தொற்று உறுதி ஆனதைத் தொடர்ந்து தனக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் ’3 இடியட்ஸ்’ படத்தின் கதாபாத்திரங்களின் பெயரை வைத்தே அவ்விஷயத்தை மாதவன் பகிர்ந்திருக்கிறார். இதில் வைரஸ் என்பது போமன் இரானி கதாபாத்திரத்தைக் குறிக்கிறது. தமிழில் சத்யராஜ் நடித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE