நடிகர் ஆமிர் கானுக்கு கரோனா தொற்று உறுதி: வீட்டுத் தனிமையில் ஓய்வு

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் ஆமிர் கானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் தற்போது வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ர மாநிலத்தில் ஆரம்ப கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் பல பாலிவுட் பிரபலங்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஏற்கனவே கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பாலிவுட் நட்சத்திரம் ஆமிர் கானும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் தனது 56வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஆமிர் கான், மொத்தமாக சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே அவரது தொற்று குறித்து செய்தித் தொடர்பாளர் பகிர்ந்துள்ளார்.

"ஆமிர் கானுக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தற்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறார். தேவையான அத்தனை நடவடிக்கைகளையும் பின்பற்றி நலமாக இருக்கிறார். சமீபத்தில் அவரது தொடர்பில் இருந்த அத்தனை பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்" என்று ஆமிர் கானின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

ஆமிர் கானின் திரையுலக நண்பர்களும் ரசிகர்களும் அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவித்து வருகினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE