'காதல்' புகழ் விருச்சிககாந்த் காலமானார்

By செய்திப்பிரிவு

'காதல்' படத்தின் மூலம் பிரபலமான விருச்சிககாந்த் உயிரிழந்தார். ஆட்டோவில் இறந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா, சரண்யா, சுகுமார், தண்டபாணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'காதல்'. இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகளும் மிகவும் பிரபலம்.

அதில் நடிகர்களை முன்வைத்து ஒரு காமெடிக் காட்சி இருக்கும். பல்வேறு ஹீரோக்கள் கெட்டப்பில் புகைப்படம் எடுத்து ஹீரோ வாய்ப்பு தேடுவார். அப்போது "ஆனா ஹீரோ சார். இல்லனா வெயிட் பண்றேன் சார்" என்று பேசியிருப்பார். படத்தில் அவருடைய பெயர் விருச்சிககாந்த். இவரது இயற்பெயர் பல்லு பாபு.

'காதல்' படத்துக்குப் பின் 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்யுடன் நடித்தார். அந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, மேலும் சில படங்களில் நடித்தார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் வருமானம் இல்லாமல் தவித்து வந்தார். சூளையில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே நடைபாதையில் வசித்து வந்தார்.

இவரது தாய், தந்தையினரின் மறைவுக்குப் பிறகு, இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அந்த ஏரியாவிலேயே இரவு ஆனால் ஆட்டோவில் தூங்கி வந்தார். அண்மையில் ஆட்டோவிலேயே உயிரிழந்த நிலையிலேயே அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எதனால், எப்படி உயிரிழந்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE