இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா, மாயாவதி கலந்த கலவைதான் கங்கணா: தம்பி ராமையா புகழாரம்

By செய்திப்பிரிவு

இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி இவர்கள் நால்வரும் கலந்த கலவைதான் கங்கணா ரணாவத் என்று நடிகர் தம்பி ராமையா புகழாரம் சூட்டியுள்ளார்.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவி'. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்தின் கதையில் பணிபுரிந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நேற்று (மார்ச் 23) 'தலைவி' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் 'தலைவி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். கங்கணா ரணாவத் வருகையால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விழாவில் தம்பி ராமையா பேசியதாவது:

''இந்தப் படம் நூற்றில் ஒன்று அல்ல. இந்த நூற்றாண்டில் ஒன்று. 1965 முதல் 1980 வரை ஜெயலலிதாவைத் தவிர்த்துவிட்டு தென்னிந்திய சினிமாவைப் பார்க்கமுடியாது. அதேபோல 1982 முதல் 2016 வரை இந்திய அரசியலில் அவரைத் தள்ளிவைத்துப் பார்க்கமுடியாது. சினிமாவில் அரசியலில் ஒரு ஜாம்பவனாகத் திகழ்ந்த ஜெயலலிதா பற்றிய படம் இது.

இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, மாயாவதி இவர்கள் நால்வரும் கலந்த கலவைதான் கங்கணா ரணாவத். திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கும். அவருடன் நடித்ததில் தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி. அதேபோல தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், கமல்ஹாசன், அஜித் இவர்கள் கலந்த கலவைதான் அரவிந்த்சாமி.

புரட்சித் தலைவர் வேடத்துக்கு இவரைத் தவிர வேறு யாரும் பொருந்தியிருக்க முடியாது. எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் நேரடியாகப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடையாது. இப்போது கங்கணா, அரவிந்த்சாமி மூலம் நான் பார்க்கிறேன்.

இப்படம் உருவாகக் காரணமாக இருந்த அஜயன் பாலா, விஜயேந்திர பிரசாத், மதன் கார்க்கி ஆகியோரை அறிவின் உச்சம் என்று சொல்லலாம். விஜய்யிடம் ஒரு விஷயத்தை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக கட்டிலில் படுத்துத் தூங்கலாம். ஒரு சிறிய பிரச்சினை கூட வராது''.

இவ்வாறு தம்பி ராமையா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE