இது என் படம் அல்ல; நம் படம்: தேசிய விருது குறித்து பிரியதர்ஷன் பெருமிதம்

By ஐஏஎன்எஸ்

சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்ற 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்மம்' திரைப்படத்தின் இயக்குநர் பிரியதர்ஷன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் பிரியதர்ஷன், "நான் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை ஆரம்பிக்க, அந்த யோசனையை ஆரம்பித்த நாளிலிருந்து மூன்று வருடங்கள் ஆனது. எனக்கும் மோகன்லாலுக்கும் கனவு நனவானதைப் போல இருந்தது. இது என் படமாகப் பார்க்கப்படக் கூடாது, நம் படமாகப் பார்க்கப்பட வேண்டும். நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பல பேர் பெரிய பங்கு வகித்தனர்" என்று பிரியதர்ஷன் கூறியுள்ளார்.

பிரியதர்ஷனின் மகன் சித்தார்த் பிரியதர்ஷன் அமெரிக்காவில் கிராபிக்ஸ் கலைக்கான படிப்பைப் படித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை அவர் தான் கையாண்டிருக்கிறார். சிறந்த கிராபிக்ஸுக்கான தேசிய விருதையும் 'மரைக்காயர்' வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதையும் இப்படம் வென்றது. சுஜித் சுதாகர் இந்த விருதைப் பெறுகிறார்.

காலிகட்டின் பிரபல கடற்படைத் தலைவர் குன்ஹாலி மரைக்காயரின் கதையைச் சொல்லும் படம் இது. இந்தியக் கடல் எல்லையில் முதல் முறையாகக் கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவர் என்று இவர் அறியப்படுகிறார். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் மேலும் மது, மஞ்சு வாரியர், பிரிட்டிஷ் நடிகர்கள், ஒரு சீன நடிகர் எனப் பலர் நடித்துள்ளனர். கடந்த வருடமே வெளியீட்டுக்குத் தயாரானாலும் கரோனா நெருக்கடியால் இந்தப் படம் வெளியாகவில்லை. வரும் மே மாதம் படம் வெளியாகும் என்று பிரியதர்ஷன் கூறியுள்ளார்.

முன்னதாக 2007ஆம் ஆண்டு, 'காஞ்சிவரம்' தமிழ்த் திரைப்படத்துக்காக பிரியதர்ஷன் இதேபோலச் சிறந்த திரைப்படத்துக்கான விருதை வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE