வார்த்தைகளால் விவரிக்க முடியாது: 4-வது முறை தேசிய விருது வென்ற கங்கணா ரணாவத் நெகிழ்ச்சி

By ஐஏஎன்எஸ்

4-வது முறை தேசிய விருது வென்ற நடிகை கங்கணா ரணாவத் அனைவருக்கும் நன்றி தெரிவித்து காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

67வது தேசிய திரைப்பட விருதுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகையாக கங்கணா ரணாவத் அறிவிக்கப்பட்டார். மணிகார்னிகா, பங்கா ஆகிய படங்களுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதன் பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் காணொலி ஒன்றை கங்கணா பகிர்ந்தார்.

இதில், "மணிகார்னிகா மற்றும் பங்கா திரைப்படங்களுக்காக எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பதைப் பற்றி அறிந்தேன். என்னை எப்படியெல்லாம் முடியுமோ அப்படி ஆதரித்த, எனக்குத் தோள் கொடுத்த மணிகார்ணிகா குழுவுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். அவர்கள் ஒவ்வொருவருடனும் இந்த தேசிய விருதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பங்காவைப் பொருத்தவரை நான் வெறும் நடிகையாக மட்டுமே பணியாற்றினேன். அந்தக் குழுவில் அனைவருக்கும் என் நன்றி. என் ரசிகர்கள், என் குடும்பத்தினருக்கு நன்றி. அவர்கள் ஆதரவின்றி எதுவும் சாத்தியப்பட்டிருக்காது" என்று கங்கணா பேசியுள்ளார்.

இந்தக் காணொலிப் பகிர்வோடு "நான் நினைப்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE