'சிச்சோரே' படத்துக்கு அளிக்கப்பட்ட விருதை மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அர்ப்பணிப்பதாகப் படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
67-வது தேசிய திரைப்பட விருதுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த இந்தி மொழித் திரைப்பட விருதை 'சிச்சோரே' திரைப்படம் வென்றது. இதையொட்டி பேசியுள்ள படத்தின் தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா, "எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக இந்தப் பெருமைக்குரிய விருதை சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு நான் அர்ப்பணிக்கிறேன். அவரது இழப்பை நாம் தாண்டி வரவே முடியாது.
ஆனால், இந்த விருது அவரது குடும்பத்துக்கும், என்னைப் போன்ற அவரது ரசிகர்களுக்கும் சிறிய அளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று வேண்டுகிறேன். எங்கள் அனைவருக்கும் மிக விசேஷமான ஒரு திரைப்படத்தைத் தந்ததற்காக இயக்குநர் நிதேஷ் திவாரிக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்" என்று சஜித் கூறியுள்ளார்.
செப்டம்பர் 6, 2019 அன்று 'சிச்சோரே' வெளியானது. சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14, 2020 அன்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு எதிரான செய்தியைச் சொன்ன படம் 'சிச்சோரே' என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஷ்ரத்தா கபூர், வருண் சர்மா, ப்ரதீக் பப்பார், நவீன் போலிஷெட்டி ஆகியோர் நடித்தனர்.