ரசிகர்களுக்குத் திரைப்படம் எப்படியிருக்கிறது என்பதுதான் முக்கியம்: ராணா

By ஐஏஎன்எஸ்

ரசிகர்களுக்குத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியமென்றும், அதை இயக்குபவர் எங்கிருந்து வருகிறார் என்பது பற்றிக் கவலையில்லை என்றும் நடிகர் ராணா டகுபதி கூறியுள்ளார்.

ராணா நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் மார்ச் 26ஆம் தேதி 'காடன்' திரைப்படம் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

வெளீயீட்டை முன்னிட்டு ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு ராணா அளித்த பேட்டி.

"ரசிகர்களுக்கு என்றுமே புதிய கதைகள் தேவை. டிக்கெட் வாங்கிக்கொண்டு திரையரங்குக்கு நுழையும் ரசிகர்களுக்கு இயக்குநர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் கவலையில்லை. அவர்களுக்குப் படம் மட்டுமே முக்கியம். இணையமும், ஊடகமும் மொழித் தடைகளைப் பெரிய அளவு உடைத்துவிட்டன என்று நினைக்கிறேன். அவெஞ்சர்ஸ் இந்தியில் வருகிறதா, தெலுங்கில் வருகிறதா என்பது குறித்து ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

எனது தாத்தாவின் மூலம் எனக்குக் கொஞ்சம் வரலாறு தெரியும். இந்தி, தெலுங்கு அல்லது தமிழ் என எந்த மொழிப் படமாக இருந்தாலும் அவை சென்னையில் மட்டுமே படம்பிடிக்கப்பட்ட காலம் இருந்தது. கலைஞர்கள் மட்டுமே வெவ்வேறு நபர்கள் இருந்தனர். மற்றபடி எந்த வித்தியாசமும் இருந்ததில்லை. கலை உண்மையில் அனைவரையும் இணைக்கும். இயக்குநரோ, நடிகரோ, இந்தக் கலைக்கென தனி மொழி கிடையாது. கடைசியில் அது திரைப்பட உருவாக்கம் என்கிற கலைதான்.

'காடன்' திரைப்பட வாய்ப்பு எனக்கு வரும்போது நான் 'பாகுபலி'யில் நடித்திருந்தேன். வனத்தில் இருக்கும் ஒரு ஆள் அப்படி ஒரு உடற்கட்டோடு இருக்க மாட்டான் என்பதில் பிரபு சாலமன் தெளிவாக இருந்தார்.

உடல் எடை குறைத்து, தாடி வளர்த்து என 3-4 மாதங்கள் செலவிட்டேன். அடுத்த 10-15 நாட்கள் அந்தக் கதாபாத்திரம் எப்படி நடந்துகொள்ளும் என்பது குறித்து தளத்தில் நேரம் செலவிட்டு யோசித்தோம். அந்தக் கதாபாத்திரத்துக்கென ஒரு இலக்கணத்தை உருவாக்கினோம். அது சமூகம் உருவாக்கியிருக்கும் இலக்கணத்திலிருந்து வித்தியாசமானது. அந்தக் கதாபாத்திரம் பொதுமக்களுடன் பல காலம் பேசாமல் இருந்த ஒரு பாத்திரம்.

அவன் அறிவார்ந்தவன். ஆனால், மக்களுடன் தொடர்பில்லாதபோது ஒருவன் வித்தியாசமாக நடந்து கொள்வான். பிரபு அதை என்னிடம் விரிவாகச் சொன்னார். முதல் கட்டப் படப்பிடிப்பு வனத்தில் வெறும் மிருகங்களோடுதான் நடந்தது. எனவே, அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைக்குள் செல்ல எனக்கு 20-25 நாட்கள் ஆனது. அதுதான் படத்தில் நான் யார், எப்படித் தோன்ற வேண்டும் என்பதைத் தீர்மானித்தது".

இவ்வாறு ராணா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE