செல்வராகவன் அற்புதமான நடிகர்: 'சாணிக் காயிதம்' இயக்குநர்

By செய்திப்பிரிவு

செல்வராகவன் அற்புதமான நடிகர் என்று 'சாணிக் காயிதம்' இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான செல்வராகவன் தற்போது 'நானே வருவேன்' என்ற படத்தை இயக்குவதற்கு ஆயத்தமாகி வருகிறார். தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளார். இந்தப் படம் தவிர்த்து, முதன்முறையாக நடிகராகவும் அறிமுகமாகவுள்ளார் செல்வராகவன்.

'ராக்கி' படத்தின் இயக்குநரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சாணிக் காயிதம்' படத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார். இதில் கீர்த்தி சுரேஷும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே இணையத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. பிப்ரவரி 26-ம் தேதி படப்பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் செல்வராகவனின் நடிப்பு குறித்து அருண் மாதேஸ்வரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "செல்வா சிறந்த நடிகர். ஒவ்வொரு இயக்குநரும் நல்ல நடிகர்தான் என்பது பொதுவான எண்ணம். ஆனால், செல்வா அற்புதமான நடிகர்” என்று அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE