'இந்தியன் 2' தாமதம்: உண்மை நிலவரம் சொல்லும் காஜல் அகர்வால்

’இந்தியன் 2’ படப்பிடிப்பு தாமதமாவதற்கான உண்மையான காரணம் குறித்து நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கமல் - லைகா நிறுவனம் கருத்து மோதல் உள்ளிட்ட பல காரணங்களால் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடராமல் இருப்பதாகக் கோலிவுட் வட்டாராங்களில் கூறப்பட்டு வருகிறது.

கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது வரை எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து எந்தவொரு தகவலுமே இல்லை. அதற்குள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'விக்ரம்' மற்றும் தேர்தல் பணிகள் ஆகியவற்றில் மும்முரமாகிவிட்டார் கமல். இதர நடிகர்களும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். இயக்குநர் ஷங்கரோ ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

எனவே, 'இந்தியன் 2' என்ன ஆனது என்பது குறித்து தெளிவாக எந்தத் தரப்பிலும் தகவல் வரவில்லை. இந்நிலையில் 'மோஸகாள்ளு' என்கிற தெலுங்குப் படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கான விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் 'இந்தியன் 2' பற்றிக் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த காஜல் அகர்வால், 'இந்தியன் 2' படத்தில் பணியாற்ற வேண்டிய முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அமெரிக்காவில் இருப்பதாகவும். கரோனா கட்டுப்பாடுகளால் அவர்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றும், அவர்களுக்கான நெருக்கடி நீங்கி, இந்தியா வந்ததும் படப்பிடிப்பு தொடரும் என்றும் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE