கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது, அங்கு கரோனா பரவலால் நிறுத்தப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்பு உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வெடுத்து வந்தார்.

'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப் படக்குழு ஆயத்தமானது. மார்ச் 15-ம் தேதி முதல் ரஜினி தேதிகள் ஒதுக்கியதால் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் இடம், ரஜினி வந்து செல்லும் நேரம் உள்ளிட்ட அனைத்தையுமே படக்குழுவினர் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். அவருடைய உடல்நிலைக்குத் தகுந்தவாறு கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அதேபோல், இனி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. சென்னை படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், பொள்ளாச்சியில் சில காட்சிகளைப் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. அனைத்துக் காட்சிகளுமே உடனுக்குடன் எடிட்டிங் செய்யப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து நடிகர்களின் டப்பிங் பணிகள் முடிந்தவுடன், ரஜினி டப்பிங் பேசுவார் எனத் தெரிகிறது. அனைத்துப் பணிகளும் முடிந்து 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE