அஜித்தின் 50-வது பிறந்த நாளுக்கு 'மங்காத்தா' படத்தை மறுவெளியீடு செய்ய வேண்டும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மங்காத்தா'. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார். யுவன் இசையமைத்திருந்தார். அஜித் ரசிகர்கள் மத்தியில் 'மங்காத்தா' படத்துக்கு என்று ஒரு தனி இடமுண்டு.
அஜித் நடிப்பில் வெளியான 50-வது படம் 'மங்காத்தா' என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வரும் மே 1-ம் தேதி அஜித் தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு 'மங்காத்தா' படத்தை மறுவெளியீடு செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் வெங்கட் பிரபு.
இது தொடர்பாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» 'த்ரிஷ்யம் 2' படத்துக்குப் புகழாரம் சூட்டிய ராஜமெளலி
» விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமி சுயேச்சையாகப் போட்டி
"தயாநிதி அழகிரி சார், வருகின்ற மே 1-ம் தேதி தலயின் 50-வது பிறந்த நாள். அன்று நம்ம 'தல 50' ஆன மங்காத்தா படத்தை உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி ஏப்ரல் 30-ம் அன்று மறுவெளியீடு செய்தால் ரசிகர்களாகிய நாங்கள் உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டு இருப்போம். பார்த்துச் செய்யுங்கள்".
இவ்வாறு இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவு உடன், 'மங்காத்தா' படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கையும் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் பிரபு. இந்தப் பதிவை முன்வைத்து அஜித் ரசிகர்கள் பலரும் தயாநிதி அழகிரிக்கு வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியுள்ளனர்.