நாயகியாகும் சாய் பல்லவியின் தங்கை: ஸ்டண்ட் சில்வா இயக்குகிறார்

By செய்திப்பிரிவு

ஸ்டண்ட் சில்வா இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக சாய் பல்லவியின் தங்கை நடிக்கவுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி சண்டை இயக்குநராக வலம் வருபவர் ஸ்டண்ட் சில்வா. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் பணிபுரிந்துள்ளார். ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் ஸ்டண்ட் சில்வா பணிபுரிந்துள்ளார்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'மாஸ்டர்' படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவரும் ஸ்டண்ட் சில்வாதான். தற்போது இவர் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி தயாரிக்கிறார் இயக்குநர் விஜய். அவர் இயக்கிய படங்களின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர் ஸ்டண்ட் சில்வாதான். இருவருமே நெருங்கிய நண்பர்கள். ஆகையால், அவரை இயக்குநராக அறிமுகம் செய்கிறார் இயக்குநர் விஜய்.

இதில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பூஜா கண்ணன். இவர் சாய் பல்லவியின் தங்கை ஆவார். இவர் தற்போது இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாக ஸ்டண்ட் சில்வா படம் அமைந்துள்ளது. இதில் சமுத்திரக்கனி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

முன்னதாக 'காரா' என்ற குறும்படத்தில் பூஜா கண்ணன் நடித்திருப்பது நினைவுகூரத்தக்கது. விரைவில் ஸ்டண்ட் சில்வா படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE