பாவ்யா பிஷ்னோய் - மெஹ்ரீன் திருமணம் நிச்சயம்: பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

பாவ்யா பிஷ்னோய் மற்றும் மெஹ்ரீன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்தவர் மெஹ்ரீன். தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்பு 'நோட்டா', 'பட்டாஸ்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

கடந்த மாதம் மெஹ்ரீனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது. மார்ச் 12-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். அதன்படி, நேற்று (மார்ச் 12) ஜெய்ப்பூரில் பாவ்யா பிஷ்னோய் - மெஹ்ரீன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் மெஹ்ரீனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஹரியாணாவுக்கு மூன்று முறை முதல்வராக இருந்த பஜன் லாலின் பேரன்தான் பாவ்யா பிஷ்னோய் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை குல்தீப் பிஷ்னோய் ஹரியாணா மாநிலத்தின் அதம்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கிறார். பாவ்யா பிஷ்னோய்யும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது மெஹ்ரீன் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், திருமணத் தேதியை இரு வீட்டாரும் முடிவு செய்யவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE