ஆஷிஷ் வித்யார்த்தி, மனோஜ் பாஜ்பாய் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில், 85.6 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த சில தினங்களாக சினிமா பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர் ரன்பீர் கபூர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர்கள் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் மனோஜ் பாஜ்பாய் இருவருக்கும் இன்று (13.03.21) கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தனக்கு தொற்று ஏற்பட்டது குறித்து ஆஷிஷ் வித்யார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இது நான் விரும்பாத ஒரு பாசிட்டிவ். எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னோடு தொடர்பில் இருந்தவர்களும் தங்களை பரிசோதித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதே போல நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர் தரப்பிலிருந்து இது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆஷிஷ் வித்யார்த்தி, மனோஜ் பாஜ்பாய் இருவரும் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE