லிங்குசாமி படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

லிங்குசாமி இயக்கவுள்ள தெலுங்குப் படத்தில் நடிக்க 'உப்பெனா' நாயகி கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 12-ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'உப்பெனா'. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றியால் நாயகி கீர்த்தி ஷெட்டிக்குப் பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கவுள்ள தெலுங்குப் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி ஷெட்டி. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தற்போது ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி இருவருடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2018-ம் ஆண்டு விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' படத்தை இயக்கியிருந்தார் லிங்குசாமி. அதற்குப் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் படமாக இது அமைந்துள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தற்போது நானி நடிக்கும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ மற்றும் சுதீர் பாபு நடிக்கும் தலைப்பிடப்படாத ஒரு படம் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE