கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் திருமணமா?- தாயார் மறுப்பு

By செய்திப்பிரிவு

நடிகை அனுபமா பரமேஸ்வரனும், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வந்த செய்திகளுக்கு அனுபமாவின் அம்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களும், திரைப்பட நடிகைகளும் திருமணம் செய்து கொள்வது, காதலிப்பது இங்கு புதிதல்ல. அப்படி சமீபகாலமாக 'பிரேமம்' படத்தில் அறிமுகமான மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனும், இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரப் பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ராவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியிலிருந்து பும்ரா விலகியது திருமணம் செய்து கொள்ளத்தான் என்றும் குறிப்பிட்டிருந்தன. இருவரும் பும்ராவின் சொந்த மாநிலமான குஜராத்தில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. மேலும், குஜராத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து புகைப்படம் ஒன்றையும் அனுபமா பதிவிட்டதால் இந்த ஊகங்கள் வலுவடைந்தன.

ஆனால், தற்போது இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனுபமாவின் அம்மா விளக்கம் அளித்துள்ளார். அனுபமாவும் பும்ராவும் வெறும் நண்பர்கள் மட்டுமே. அவர்கள் காதலிக்கவில்லை என்றும், அனுபமா குஜராத் சென்றிருப்பது 'கார்த்திகேயா 2' தெலுங்குப் படத்தின் படப்பிடிப்புக்கு என்றும் அனுபமாவின் அம்மா சுனிதா கூறியுள்ளார்.

மேலும், "அனுபமாவின் திருமணம் குறித்து ஊடகங்களே ஆர்வம் காட்டுகின்றன. அவரைப் பற்றி அனைவரும் மறக்கும்போது புதிதாக ஒரு புரளி உருவாகும். இதை நாங்கள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. பும்ராவும் அனுபமாவும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் தொடர்வது பிடிக்காமல் கூட சிலர் பேசியிருக்கலாம். இப்படியான செய்திகள் வருவதால் தற்போது இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்வதில்லை என்று நினைக்கிறேன்" என்று சுனிதா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE