தேசிங் பெரியசாமி - நிரஞ்சனி தம்பதியினருக்கு கார் ஒன்றைத் திருமண பரிசாக வழங்கியுள்ளார் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் தயாரிப்பாளர்
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. பிப்ரவரி 28-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை வயகாம் 18 நிறுவனம் வழங்க ஆண்டோ ஜோசப் தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் தேசிங் பெரியசாமி - நிரஞ்சனி இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் பிப்ரவரி 25-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலருக்கும் தேசிங் பெரியசாமி - நிரஞ்சனி இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்நிலையில், தேசிங் பெரியசாமி - நிரஞ்சனி தம்பதியினருக்கு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். படத்தின் வெற்றிக்காகவும், திருமண பரிசாகவும் இந்தக் காரைக் கொடுத்துள்ளார்.
» இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள் ஸ்பெஷல்: புதிய நூற்றாண்டு தமிழ் சினிமாவின் முதன்மைப் படைப்பாளி
இந்தப் பரிசு தொடர்பாக இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "மிக்க நன்றி சார். பெரிய ஆச்சரியம். இந்தப் பரிசுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.