ஹரி - அருண் விஜய் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. அந்தப் படத்தின் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சென்னையில் இன்று (மார்ச் 3) தொடங்கப்பட்டது. இது அருண் விஜய் நடிப்பில் உருவாகும் 33-வது படமாகும். 'மாஃபியா' படத்துக்குப் பிறகு இதில் அருண் விஜய் - ப்ரியா பவானி சங்கர் ஜோடி இணைந்து நடிக்கவுள்ளது.

மேலும், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ், ராமசந்திர ராஜு, ஐஸ்வர்யா, ஜெயபாலன், ரமா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் தொடங்கப்பட்டுள்ள படப்பிடிப்பு, 16-ம் தேதி முதல் பழநியில் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம், ராம்நாடு, தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அருண் விஜய் நடிப்பில் உருவான படங்களை விட அதிகப் பொருட்செலவில் உருவாகும் படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சக்திவேல், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், எடிட்டராக ஆண்டனி, கலை இயக்குநராக சக்தி வெங்கட் ராஜா ஆகியோர் பணிபுரியவுள்ளனர். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE