கட்டிடக் கலைஞர்களுக்கு மிரட்டல்: மும்பை மாநகராட்சி மீது கங்கணா குற்றச்சாட்டு

By ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் மும்பை போலீஸாரின் விசாரணை குறித்து நடிகை கங்கணா ரனாவத் குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

இதனிடையே, மும்பையில் பாலி ஹில் பகுதியில் உள்ளஅவரது பங்களாவில் அனுமதியின்றி கட்டுமானப்பணிகள் நடந்ததாகக் கூறி மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பங்களாவின் ஒரு பகுதியை இடித்தனர். இதனிடையே, கங்கணாவின் அவசர மனுவை ஏற்றுக்கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், கட்டிடத்தை இடிக்க தடைவிதித்தது.

எனினும், தனது பங்களாவின் 40 % இடிக்கப்பட்டதாகவும் ரூ.2 கோடி நஷ்டஈடு கோரியும் கங்கணா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் கங்கணாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் இடிக்கப்பட்ட தனது பங்களாவை மீண்டு கட்டுவதற்கு எந்தவொரு கட்டிடக்கலை நிபுணர் வரவில்லை என்று கங்கணா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கணா கூறியுள்ளதாவது:

மும்பை மாநகராட்சிக்கு எதிரான வழக்கில் நான் வெற்றி பெற்றுள்ளேன். தற்போது ஒரு கட்டிடக் கலைஞர் மூலம் இழப்பீடுக்கான புகாரை நான் பதிவு செய்ய வேண்டும். ஆனால் எந்தவொரு கட்டிடக் கலைஞரும் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

காரணம் அவர்களுடைய உரிமம் ரத்து செய்யப்படும் என்று மும்பை மாநாகராட்சியிலிருந்து அவர்களுக்கு மிரட்டல்கள் வருவதாக கூறுகின்றனர். என்னுடை பங்களா சட்டவிரோதமாக இடிக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகிறது.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE