தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன்: அருண் பாண்டியன்

நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால், தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன் என்று அருண் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோகுல் இயக்கத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அன்பிற்கினியாள்'. இந்தப் படம் மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'ஹெலன்' படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, இசையமைப்பாளராக ஜாவித் ரியாஸ், எடிட்ட்ராக பிரதீப் ஈ.ராகவ், கலை இயக்குநரக ஜெய்சங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

மார்ச் 5-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை ஒரு வாரத்துக்கு முன்பாகவே பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டது படக்குழு. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் அருண் பாண்டியன் பேசியதாவது:

”'அன்பிற்கினியாள்' படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கரோனா காரணமாக ரிலீஸ் பண்ண தாமதம். நான் 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தப்படத்தில் நடித்துள்ளேன். இடையே விஜயகாந்த் சாருக்காக, அஜித் சாருக்காக சில படங்கள் நடித்தேன். இந்தப் படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று ஊக்கம் அளித்தவர் இயக்குநர் கோகுல்.

என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்தவர் இசையமைப்பாளர் ஜாவித். மிக சிறப்பாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு. இந்தப்படத்தின் கதாபாத்திரம் போல கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன். ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE