எனக்கு எந்த வித திமிரும் கிடையாது: கெளதம் மேனன்

By செய்திப்பிரிவு

எனக்கு எந்த வித திமிரும் கிடையாது என்று இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கெளதம் மேனன். தற்போது வருண் நடித்து வரும் 'ஜோஷ்வா' படத்தை இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து சிலம்பரசன் நடிக்கவுள்ள 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

கமல், அஜித், விக்ரம், சிலம்பரசன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்துவிட்டார் கெளதம் மேனன். ரஜினி, விஜய் போன்ற நடிகர்களின் படத்தை இயக்குவதற்கும் இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனை கெளதம் மேனன் பல பேட்டிகளில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்ச்சியாகப் பெரிய நடிகர்களுடன் இணைந்து பணிபுரிவது குறித்து கெளதம் மேனனிடம் கேட்டதற்கு அவர் கூறியிருப்பதாவது:

"பெரிய நடிகர்கள் என் படத்தில் நடித்தால் அது அவர்கள் படம் என்பதைத் தாண்டி என் படம் என்று ஆகிவிடுமோ என அவர்கள் கவலைப்படலாம் என்று சில நேரங்களில் நினைத்ததுண்டு. ஆனால் என்னை நம்பி அவர்கள் நடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கு எந்த வித திமிரும் கிடையாது. நான் கத்தவோ, புலம்பவோ, அதிகமாகப் பாராட்டவோ மாட்டேன். மனப்பூர்வமாகப் படத்தை எடுக்காத இயக்குநர் நான் கிடையாது. எனவே ஏன் என்னிடம் ஒரு படத்தில் நடிக்கக் கூடாது. கண்டிப்பாக எந்தக் காரணம் கொண்டும் மிக மோசமான படத்தை நான் எடுக்கப்போவதில்லை.

அது வசூல் ரீதியாக அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும் கண்டிப்பாக அது அதற்குரிய ரசிகர்களைத் தேடிக் கொள்ளும்"

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE