உதயநிதிக்கு வில்லனாக ஆரவ் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக ஆரவ் நடித்து வருகிறார்.

தீவிர அரசியல் களத்தில் ஈடுபட்டு வந்தாலும், ஒப்பந்தமாகியுள்ள படங்களிலும் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். 'சைக்கோ' படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

மாதத்தில் 15 நாட்கள் தீவிர பிரச்சாரம், 15 நாட்கள் படப்பிடிப்பு என்கிற பாணியில் பணிபுரிந்து வருகிறார். மகிழ் திருமேனி படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். மேலும் ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

இதில் உதயநிதிக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நாயகனாக மட்டுமே நடித்து வந்தார் ஆரவ். இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே, வில்லனாக நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 45% படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. தற்போது திருச்சியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. இதற்குப் பிறகு தேர்தல் முடிந்தவுடன் தான் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE