நான் உங்கள் இருவரையும் விண்ணைத்தாண்டி நேசிக்கிறேன்: ரஜினிக்கு ஐஸ்வர்யா தனுஷ் திருமண நாள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

நான் உங்கள் இருவரையும் விண்ணைத்தாண்டி நேசிக்கிறேன் என்று தந்தைக்குத் தெரிவித்துள்ள திருமண நாள் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி இன்று (பிப்ரவரி 26) தனது 40-வது திருமண நாளைக் கொண்டாடி வருகிறார். ரஜினிகாந்த் - லதா தம்பதியினருக்கு திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

தற்போது தனது தந்தைக்கும், தாய்க்கும் திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"என் தாய் என் தந்தையும் மட்டும் தனியாக நேசிக்கவில்லை. அவருடைய குடும்பத்தையும் சேர்த்துத் தழுவிக் கொண்டார். பதிலுக்கு என் தந்தையும் அம்மாவழி தாத்தா பாட்டியை அவர்களது இறுதி நாட்கள்வரை சொந்த தந்தை, தாய் போல் பேணிக்காத்தார். உண்மையில், எனது தாத்தாவும் பாட்டியும் காவல் தேவதைகள் என நான் நம்புகிறேன்.

வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு திருப்பங்களிலும் அவர்கள் உங்கள் இருவரையும் பாதுகாத்து வழிநடத்தியுள்ளனர். திருமணம் என்பது மாறி மாறி ஒருவரது சுமையைத் தாங்குவது. ஆசையைக் காட்டிலும் பரஸ்பர பரிவு நீண்ட காலம் நிலைத்திருக்கும். திருமண உறவில் ஏற்படும் நட்பு நீண்டகால இணக்கத்துக்கு அடித்தளமாகிறது. அப்போதுதான் வீடு வெறும் கட்டிடமாக இல்லாமல் அன்பு நிறைந்த இல்லமாக இருக்கும்.

நான் உங்கள் இருவரை மட்டுமே நேசிக்கவில்லை. இந்த ஒட்டுமொத்த குடும்பத்தையும் நேசிக்கிறேன். அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளுக்கும் இடையே அனைவரையும் நேசிக்கிறேன். எனது தாய், தந்தைக்குச் சிறப்பான திருமண வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். உங்களை நான் விண்ணைத் தாண்டி நேசிக்கிறேன்”

இவ்வாறு ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE