நல்ல நடிகை அடையாளத்தை ஊன்றிய ரசிகர்களுக்குப் பேரன்பும் பெருநன்றியும்: ஐஸ்வர்யா ராஜேஷ்

By செய்திப்பிரிவு

நல்ல நடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்குப் பேரன்பும் பெருநன்றியும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'க/பெ ரணசிங்கம்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இந்தப் படம் கரோனா ஊரடங்கும் சமயத்தில் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பல்வேறு தமிழ்த் திரையுலகினரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் 'க/பெ ரணசிங்கம்' படத்தில் சிறப்பாக நடித்திருந்ததிற்காகச் சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

சென்னை சர்வதேச 18-ஆவது திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று சிறந்த படங்கள் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை 'க/பெ ரணசிங்கம்' படத்தில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்ததிற்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த விருதை வழங்கினார்கள்.

இந்த விருது பெற்றதை குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது:

“உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ’க/பெ ரணசிங்கம்’ படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் என் அன்பான நன்றி.

மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அதற்குத் தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். நல்ல நடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்குப் பேரன்பும் பெரு நன்றியும்"

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE