'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்தின் கதைக்களம் தொடர்பாக கெளதம் மேனன் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. 2010-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். வசூல் ரீதியாக இந்தப் படம் மாபெரும் சாதனைகளைப் புரிந்தது. இதற்கான அடுத்த பாகத்துக்கான கதையையும் கெளதம் மேனன் தயார் செய்துவிட்டார்.
இன்று (பிப்ரவரி 26) 'விண்ணைத்தாண்டி வருவாயா' வெளியான நாளாகும். அந்தப் படம் வெளியாகி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது தொடர்பான படக்குழுவினர் பலரும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். "'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற பெயரைக் கேட்டவுடன் உங்களுக்கு எந்தக் காட்சி, சம்பவம் மனதில் தோன்றுகிறது" என்ற கேள்விக்கு கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:
”என் பதின்ம வயதிலிருந்தே, வீட்டு வாசலில் கேட் அருகே ஒரு இளைஞன் நின்று மேலே பால்கனியில் நிற்கும் பெண்ணைப் பார்க்கும் காட்சி என் மனதில் இருந்தது. ஹொஸன்னா பாடலுக்காக நான் ரஹ்மான் அவர்களிடம் சொன்ன காட்சி சூழலும் இதுவே” இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' கதைக்களம் குறித்து கெளதம் மேனன், "கார்த்தி, ஜெஸ்ஸி மற்றும் கார்த்திக்கின் வாழ்க்கையில் இருக்கும் இன்னொரு பெண்ணைப் பற்றிய கதை. சில பேர் ஒன்றாகச் சேரவே முடியாது. அல்லது அவர்களுக்கு எப்போது வேண்டுமோ அப்போது சேர முடியாது. ஆனால் ஒரு இரண்டாவது வாய்ப்பு பின்னால் கிடைத்தால்?" என்றும் குறிப்பிட்டுள்ளார்.