ஸ்ரீதேவிக்குப் பிறகு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரே நடிகை நான்தான் என்று கங்கணா கூறியுள்ளார்.
ஆனந்த எல்.ராய் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான படம் ‘தானு வெட்ஸ் மானு’. மாதவன், கங்கணா நடித்த இப்படம் இந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் பெற்ற வெற்றியால் இதன் இரண்டாம் பாகமாக 2015ஆம் ஆண்டு ‘தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்’ என்ற படமும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
‘தானு வெட்ஸ் மானு’ வெளியாகி நேற்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதனை முன்னிட்டு படக்குழுவினர் பலரும் இப்படம் குறித்த நினைவுகளை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் ‘தானு வெட்ஸ் மானு’ படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
''நான் தொடர்ந்து கடுமையான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த தருணத்தில் இப்படம் என் சினிமா வாழ்க்கையின் பிம்பத்தை மாற்றியது. நகைச்சுவை படங்களில் என்னுடைய அறிமுகமாகவும் அமைந்தது. நான் என்னுடைய நகைச்சுவைத் திறனை வலிமைப்படுத்தியதுடன் நடிகை ஸ்ரீதேவிக்குப் பிறகு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரே நடிகையாகவும் மாறினேன்.
இப்படங்களைக் கொடுத்த இயக்குநர் ஆனந்த் எல்.ராய், கதாசிரியர் ஹிமான்ஷு ஷர்மா ஆகிய இருவருக்கும் நன்றி. சிரமப்படும் இயக்குநர்களாக அவர்கள் என்னிடம் வந்தபோது என்னால் அவர்களுடைய சினிமா வாழ்வை மாற்ற முடியும் என்று நினைத்தேன். ஆனால், அவர்களால்தான் என்னுடைய சினிமா வாழ்வு மாறியது. எந்தப் படம் ஓடும் எந்தப் படம் ஓடாது என்று யாராலும் சொல்ல இயலாது. எல்லாம் விதிப்படிதான் நடக்கும். என் விதியில் நீங்கள் வந்தது மகிழ்ச்சி''.
இவ்வாறு கங்கணா பதிவிட்டுள்ளார்.