லிங்குசாமி படத்தின் நாயகியாகும் 'உப்பெனா'  கீர்த்தி ஷெட்டி

By செய்திப்பிரிவு

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

2018-ம் ஆண்டு விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' படத்தை இயக்கியிருந்தார் லிங்குசாமி. அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்காகக் கதை எழுதி வந்தார். இதில் நடிப்பதற்காகப் பல்வேறு முன்னணித் தமிழ் மற்றும் தெலுங்கு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் லிங்குசாமி.

தற்போது இந்தக் கதையில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் பொத்தினேனி நடிப்பது உறுதியாகியுள்ளது. ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ‘உப்பெனா’ படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாகியுள்ள தெலுங்குப் படம் 'உப்பெனா'. நாயகியாக க்ரீதி ஷெட்டி நடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியானது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டியின் நடிப்பை நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

தற்போது நானி நடிக்கும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ மற்றும் சுதீர் பாபு நடிக்கும் தலைப்பிடப்படாத ஒரு படம் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE