‘இறந்துவிட்டேன் என்றே நினைத்தேன்’-‘அவதார் 2’ அனுபவம் பகிரும் கேட் வின்ஸ்லேட்

‘அவதார் 2’ படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நடிகை கேட் வின்ஸ்லேட் பகிர்ந்துள்ளார்.

2009-ல் வெளியான 'அவதார்' திரைப்படம், சினிமா வரலாற்றில் உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெற்ற படமாக மாறியது. இதனைத் தொடர்ந்து 'அவதார்' படத்தின் அடுத்த பாகங்கள் உருவாகும் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கடந்த சில வருடங்களாகவே கூறிவந்தார். இதற்காக அவர் 10 ஆண்டுகளை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

முதல் கட்டமாக 'அவதார்' படத்தின் 2-ம் பாகம் 2021-ம் ஆண்டும், அதனைத் தொடர்ந்து 2023, 2025, 2027 என இரண்டு வருட இடைவெளியில் அவதார் 5 வரை அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு வெளியாக வேண்டிய ‘அவதார் 2’ அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குத் தள்ளிப் போனது.

‘அவதார்’ முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள் இப்படத்திலும் நடித்துள்ளனர். புதிதாக ‘ரோனல்’ என்ற கதாபாத்திரத்தில் நடிகை கேட் வின்ஸ்லேட் நடித்துள்ளார்.

படப்பிடிப்பின்போது தான் மரணத்தின் அருகில் சென்றுவிட்டு வந்ததாக நடிகை கேட் வின்ஸ்லேட் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

''தண்ணீருக்கு அடியில் படப்பிடிப்பு நடத்தியது நம்பவே முடியாத ஒரு தருணம். மனம் முற்றிலுமாக வெறுமையாகி விட்டது. அந்த நேரத்தில் என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. மூளையில் எதுவுமே ஓடவில்லை. நீரில் இருக்கும் காற்றுக் குமிழிகளை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. தண்ணீரிலிருந்து வெளியே வந்ததும் நான் கேட்ட முதல் கேள்வி, ‘நான் இறந்துவிட்டேனா?’ என்பதுதான். ஆம், நான் இறந்துவிட்டேன் என்றே நினைத்தேன்''.

இவ்வாறு நடிகை கேட் வின்ஸ்லேட் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE