த்ரிஷ்யம் 3 வருமா? - இயக்குநர் ஜீத்து ஜோசப் பதில்

By செய்திப்பிரிவு

த்ரிஷ்யம் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்படுமா என்கிற கேள்விக்குப் படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் பதிலளித்துள்ளார்.

மோகன்லால், மீனா நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். விறுவிறு திரைக்கதையும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பல்வேறு இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது.

பிப்.19ஆம் தேதி இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடியில் வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் த்ரிஷ்யம் திரைப்படத்தின் 3 பாகம் எடுக்கப்படுமா என்பது குறித்து ஒரு செய்தி இணையதளத்துக்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் பதிலளித்துள்ளார்.

"இப்போது இல்லை. ஆனால் சரியாக எடுக்க நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக அதை உருவாக்குவேன். அப்படி உருவாக்கவில்லையென்றால் அது குற்றமாகிவிடும். 7 வருடங்களுக்கு முன்னால் த்ரிஷ்யம் 2 நடக்காது என்றேன். ஆனால் இப்போது நடந்துவிட்டது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. ஜார்ஜ் குட்டி என்றுமே விழிப்புடன் இருக்க வேண்டும். எந்த விதமான இடர் பக்கமும் அவர் போக முடியாது" என்று ஜீத்து ஜோசப் கூறியுள்ளார்.

இந்திய திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களோடு ஹாலிவுட் நடிகை ஹிலாரி ஸ்வாங்கும் த்ரிஷ்யம் 2வைப் பாராட்டியுள்ளார். இந்த வரவேற்பால் 'த்ரிஷ்யம் 2' படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. முதலாவதாகத் தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் நடிக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்குமார் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளன. இதை ஜீத்து ஜோசப்பே இயக்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE