நீ பிறவி நட்சத்திரம்: 'உப்பெனா' நாயகிக்கு சிரஞ்சீவி புகழாரம்

By செய்திப்பிரிவு

நீ ஒரு பிறவி நட்சத்திரம், உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று 'உப்பெனா' திரைப்படத்தின் நாயகி க்ரீதி ஷெட்டியை நடிகர் சிரஞ்சீவி புகழ்ந்துள்ளார்.

நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாகியுள்ள தெலுங்குப் படம் 'உப்பெனா'. நாயகியாக க்ரீதி ஷெட்டி நடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். முதல் வாரத்திலேயே உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்து ஆச்சரியம் அளித்தது. புதுமுக நடிகரின் படம் இந்தளவுக்கு வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறை என்று தெலுங்கு திரையுலகின் வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி படக்குழுவினரை தனித்தனியாக பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். இதில் சிரஞ்சீவி அனுப்பிய கடிதத்தை நடிகை க்ரீதி ஷெட்டி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

"அன்பார்ந்த க்ரீதி,

நீ பிறவி நட்சத்திரம். மலர் பூக்கும் முன்னரே அதன் நறுமணம் பரவுவதைப் போல, உன்னை பெரிய திரையில் ரசிகர்கள் பார்க்கும் முன்னரே உனது திறமையும், அன்பான நடத்தையும் மக்களின் சிந்தையில் பரவிவிட்டன. ஆனால் நீ நட்சத்திரம் மட்டுமல்ல ஒரு அற்புதமான நடிகை என்பதையும் நிரூபித்து விட்டாய்.

ஒரே வாரத்தில் மொழியின் நுணுக்கங்களைக் கற்றறிந்து, அட்டகாசமான நடிப்பைத் தந்திருப்பது நீ ஒரு ஒரு இளம் அதிசயம் என்பதை காட்டியிருக்கிறது. மனதுக்கு சந்தோஷத்தைத் தரும் உப்பெனாவின் இந்த வெற்றிக்கு நான் உன்னை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். இந்த பேபம்மாவுக்கு தெலுங்கு ரசிகர்கள் என்றுமே அவர்களின் அன்பையும்,பாசத்தையும் என்றுமே காட்டுவார்கள்.

உனக்கு அற்புதமான எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன், அதற்காக உன்னை வாழ்த்துகிறேன். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்" என்று சிரஞ்சீவி இந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE