தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார்: ரோபோ சங்கர் நெகிழ்ச்சி

தன்னுடைய வாழ்க்கையை உயர்த்தியதே தனுஷ்தான் என்று நடிகர் ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் ரசிகரான பரணி என்பவரது உணவகத் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் நடிகர் ரோபோ ஷங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உணவகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், தனக்கு வாழ்க்கை கொடுத்தது தனுஷ்தான் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ரோபோ ஷங்கர் கூறியதாவது:

''தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தனுஷ்தான். கரோனா காலகட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்தார்.

ஒரு பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பிறகு தனுஷுக்கு போன் செய்தேன். அப்போது அவர் டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இதைக் கேட்கலாமா என்று யோசித்து தயக்கத்துடன் கேட்டேன். எனக்குக் குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியைச் செய்தார்.

நான் இன்று என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாகச் சாப்பிடுவதற்கான ஆரம்பப் புள்ளியைப் பல இயக்குநர்கள் வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்தான்.

இவ்வாறு ரோபோ ஷங்கர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE