டப்பிங் கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது எப்போது? - ரவீனா சோகம்

By செய்திப்பிரிவு

டப்பிங் கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது எப்போது கொடுப்பார்கள் என்று ரவீனா சோகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி டப்பிங் கலைஞராகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ரவீனா ரவி. 'ஐ', 'அநேகன்', 'கத்தி', 'தெறி', '2.0', 'இமைக்கா நொடிகள்', 'அடங்க மறு', 'ஈஸ்வரன்', 'பூமி' உள்ளிட்ட பல படங்களில் நாயகிக்கு டப்பிங் கொடுத்தவர் ரவீனா ரவி. இவருடைய அம்மா ஸ்ரீஜா ரவியும் இந்திய அளவில் புகழ்பெற்ற டப்பிங் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஜா ரவி - ரவீனா ரவி இருவருமே தற்போது படங்களில் நடித்து வருகிறார்கள். தற்போது 'ராக்கி' மற்றும் 'வட்டார வழக்கு' ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் ரவீனா ரவி. நேற்று (பிப்ரவரி 20) 2019 மற்றும் 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகளைத் தமிழக அரசு வழங்கியது.

அந்தப் பட்டியலில் நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர், புகைப்படக் கலைஞர் என அனைத்து பிரிவுகளும் இடம்பெற்றது. ஆனால், டப்பிங் கலைஞர்கள் பிரிவு இடம்பெறவில்லை. இது தொடர்பான தனது சோகத்தை ட்விட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார் ரவீனா ரவி.

இது தொடர்பாக கலைமாமணி விருதுகள் பட்டியலை சிறுவீடியோவாக வெளியிட்டு "கலைமாமணி விருது பிரிவுகள். இதில் எப்போது டப்பிங் கலைஞர்கள் பிரிவு இடம்பெறும்" என்று பதிவிட்டுள்ளார் ரவீனா ரவி. இந்தப் பதிவுக்கு சமூக வலைதளத்தில் ரவீனா ரவியை பின் தொடர்பவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE