'வாரிசு' வார்த்தை கொடுமையானது: அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆதரவுக் கரம் நீட்டிய ஃபர்ஹான் அக்தர்

வாரிசு என்பதால் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தநிலையில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஃபர்ஹான் அக்தர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலம் சென்னையில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற்றது. ஐபில் போட்டியில் பங்கேற்கும் அணிகள் பலவும், போட்டியிட்டு பல்வேறு வீரர்களை ஏலத்தில் எடுத்தது. இந்த ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

21 வயதான அர்ஜூன் ஆல்ரவுண்டர் வரிசையில் இருந்தார். அவரது அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அவருடைய ஏலம் தொடங்கியது போது எந்தவொரு அணியுமே, அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கே மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது. அந்த அணிக்கு சச்சின் டெண்டுல்கர் தான் பேட்டிங் ஆலோசகராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து வாரிசு சர்ச்சை உருவானது. பலரும் அவருக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இந்த சர்ச்சைத் தொடர்பாக பாலிவுட் நடிகரும், இயக்குநருமான ஃபர்ஹான் அக்தர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அர்ஜுன் டெண்டுல்கரை பற்றி நான் இதைச் சொல்லியாக வேண்டும் என்று தோன்றுகிறது. நாங்கள் இருவரும் ஒரே ஜிம்முக்கு செல்கிறோம். அவர் தனது உடலைப் பேண எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பதையும், ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மாற அவரது கவனத்தையும் நான் பார்த்திருக்கிறேன்.

அவரை நோக்கி வீசப்படும் வாரிசு என்ற வார்த்தை கொடுமையானது மற்றும் நியாயமற்றது. அவரது உற்சாகத்தைக் கொன்று, ஆரம்பிக்கும் முன்னரே அவரை கீழே தள்ளி விடாதீர்கள்"

இவ்வாறு ஃபர்ஹான் அக்தர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE