ரஷ்யாவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'கோப்ரா' படக்குழு

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் 'கோப்ரா' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பிப்ரவரி 23-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்து வருகிறார். இந்த கெட்டப்கள் அடங்கிய போஸ்டரை தான் படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டது.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கிய சமயத்தில், ரஷ்யாவில் சில முக்கியமான காட்சிகளை 'கோப்ரா' படக்குழு படமாக்கி வந்தது. அப்போது ரஷ்யாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருந்ததால், படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பியது படக்குழு.

அதற்குப் பிறகு இந்தியாவில் படப்பிடிப்பு அனுமதிக்கப்பட்டவுடன், சில முக்கியமான காட்சிகளை இரவு - பகலாகப் படமாக்கி வந்தது படக்குழு. ரஷ்யாவில் எடுக்க வேண்டிய காட்சிகளை, க்ரீன் மேட்டில் எடுத்து கிராபிக்ஸ் செய்ய ஆலோசனை நடத்தியது. ஆனால், பொருட்செலவு, கால அவகாசம் என எதிர்பார்த்ததை விட அதிகம் தேவைப்பட்டது.

இதனால், மீண்டும் ரஷ்யாவிலேயே படப்பிடிப்பை நடத்த 'கோப்ரா' படக்குழு திட்டமிட்டது. அதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக விக்ரம் நாளை (பிப்ரவரி 21) மாலை ரஷ்யாவுக்கு பயணிக்கவுள்ளார். ரஷ்யாவில் படமாக்க வேண்டிய காட்சிகளுடன், படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும்.

அதற்குப் பிறகு சென்னையில் ஓரிரு நாட்கள் சின்ன சின்ன காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் எனப் படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள். 'கோப்ரா' படப்பிடிப்பை முடித்துவிட்டு, மீண்டும் ஏப்ரலில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் விக்ரம்.

'பொன்னியின் செல்வன்' படத்தை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE