‘வாழ்வில் முக்கியமான நாள்’- தனுஷுக்கு நன்றி தெரிவித்த ஆதிக் ரவிச்சந்திரன்

By செய்திப்பிரிவு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் ‘பஹிரா’. இப்படத்தில் அமைரா தஸ்துர், காயத்ரி உள்ளிட்ட 5 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அபிநந்தன், இசையமைப்பாளராக கணேசன் சேகர், எடிட்டராக ரூபன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே 50% படப்பிடிப்பை முடித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். ஆனால் அதன் பிறகு கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் பணிகள் அனைத்தும் நின்றுபோனது.

தற்போது சில தினங்களுக்கு முன்பு ‘பஹிரா’ படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் இன்று காலை 11 மணியளவில் இப்படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. இதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

இந்நிலையில் பஹிரா பட டீஸர் வெளியாவது குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

உற்சாகமாகவும் பதட்டமாகவும் உணர்கிறேன். எனது இரண்டாவது படத்தின் முடிவு தெரிந்து 3 நீண்ட வருடங்கள் ஆகியிருக்கிறது. அந்தக் கட்டத்தை தாண்டுவது பெரிய சவாலாக இருந்தது. நாளை என் வாழ்வில் முக்கியமான நாள். தனுஷ் அவர்கள் என் அடுத்த திரைப்படம் பஹிராவின் டீஸரை வெளியிடுகிறார். இந்த ஆதரவுக்கு நன்றி சொல்வது மட்டுமே போதாது சார். பஹிராவோடு மீண்டும் நான் களம் இறங்குகிறேன்.

இவ்வாறு ஆதிக் கூறியுள்ளார்.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்துக்குப் பிறகு நடிகர் சிம்புவை வைத்து ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக்.

ஆனால் அப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வியை சந்தித்தது. இணையத்திலும் பரவலாக கேலி செய்யப்பட்டது. அதன் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. இந்தச் சூழலில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ‘பஹிரா’ படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE