எப்போதும் போல் தடைகள், பிரச்சினைகளைச் சந்தித்தேன்: விஷால்

By செய்திப்பிரிவு

எப்போதும் போல் தடைகள், பிரச்சினைகளைச் சந்தித்தேன் என்று விஷால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சக்ரா'. இந்தப் படம் வெளியீட்டுப் பிரச்சினையில் சிக்கியது. விஷால் நடித்த 'ஆக்‌ஷன்' படத்தின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பாக ட்ரைடண்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இதனால் 'சக்ரா' படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்பதில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில், 'சக்ரா' வெளியீட்டுக்குத் தடை ஏதுமில்லை என்று இன்று (பிப்ரவரி 18) உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து 'சக்ரா' படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

'சக்ரா' படம் திட்டமிட்டபடி வெளியாவது தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"வாய்மையே என்றும் வெல்லும்.

ஆம். எப்போதும் போலத் தடைகளை, பிரச்சினைகளைச் சந்தித்தேன். எனக்கும், என் தொழிலுக்கும், திரைத்துறை தொடர்பான எல்லாவற்றுக்கும் என்றும் உண்மையுடன் இருந்திருக்கிறேன்.

தடை நீக்கப்பட்டுவிட்டது. 'சக்ரா' நாளை உலகெங்கும் வெளியிடப்படும். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 'சக்ரா' திரைப்படத்துக்கு மிகப்பெரிய நாளாக அமையும்.

சரியான நேரத்தில், தயாரிப்பாளர் மட்டுமில்லாது இந்தப் படம் தொடர்பான எல்லோருடைய நலனையும் மனதில் வைத்து தடையை நீக்கி இந்த உத்தரவைத் தந்த நீதிமன்றத்துக்கு நன்றி.

திட்டமிட்டபடி படத்தை நாங்கள் வெளியிடவுள்ளோம். வாய்மையே என்றும் வெல்லும்".

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE