லிங்குசாமி இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கவுள்ளார்.
2018-ம் ஆண்டு விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' படத்தை இயக்கியிருந்தார் லிங்குசாமி. அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்காகக் கதை எழுதி வந்தார். இதில் நடிப்பதற்காகப் பல்வேறு முன்னணித் தமிழ் மற்றும் தெலுங்கு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் லிங்குசாமி.
தற்போது இந்தக் கதையில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் பொத்தினேனி நடிப்பது உறுதியாகியுள்ளது. ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு லிங்குசாமிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இறுதியாக 'தடம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ரெட்' படத்தில் நடித்திருந்தார் ராம் பொத்தினேனி. அதற்குப் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
லிங்குசாமி - ராம் பொத்தினேனி படத்தில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் உருவாகவுள்ளது.