மோகன்லால் நடிப்பில் 'த்ரிஷ்யம் 2' அமேசான் ப்ரைம் தளத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகவிருக்கும் நிலையில், கேரள திரைப்பட சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திரையரங்க உரிமையாளர்களை இது பாதிக்கும் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்துப் பேசியிருக்கும் சங்கத்தின் தலைவர் விஜயகுமார், "இந்த நடிகர்களின் இன்றைய அந்தஸ்துக்கு அவர்களை உயர்த்தியது திரையரங்குகள்தான். எனவே, இது மோகன்லாலுக்கு மட்டுமல்ல, எல்லா நட்சத்திரங்களுக்குமே திரையரங்குகளைக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. ஏனென்றால் அதிலிருந்துதான் இவர்கள் அத்தனையும் பெற்றுள்ளனர். 'த்ரிஷ்யம் 2' முதலில் திரையரங்க வெளியீடாகத்தான் பதிவு செய்யப்பட்டது.
நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நடிகருக்கும் எதிரி அல்ல. திரையரங்குகளின் நலனுக்காகவே பேசுகிறோம். பல்வேறு காரணங்களால் திரையரங்கத் துறை இழப்பைச் சந்தித்து வருகிறது. அந்தத் துறையின் பணியாளர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் மோசமாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு வெளியாகி மலையாளத் திரையுலகில் வசூல் சாதனை படைத்த திரைப்படம் 'த்ரிஷ்யம்'. 8 வருடங்களுக்குப் பிறகு இதன் 2ஆம் பாகம் வெளியாகவுள்ளது. பிப்ரவரி 19 அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் 'த்ரிஷ்யம் 2' வெளியாகும் என்று மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.