3 நாட்களில் ரூ.50 கோடி வசூல்: 'உப்பெனா' படக்குழுவினர் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

3 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியிருப்பதால், 'உப்பெனா' படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாகியுள்ள தெலுங்குப் படம் 'உப்பெனா'. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியானது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, ராம்சரண் ஆகியோர் படக்குழுவினருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு முன்னணி நடிகர்களும் தங்களுடைய சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 15) 'உப்பெனா' இயக்குநர் புச்சிபாபு சனாவுக்குப் பிறந்த நாளாகும். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளியிட்டுள்ள போஸ்டரில் 3 நாட்களில் மொத்த வசூல் 50 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஒரு அறிமுக நாயகனின் படத்துக்கு 3 நாட்களில் 28 கோடி ரூபாய் பங்குத் தொகையாகக் கிடைத்துள்ளது. இதுவே பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இந்தப் படத்தின் வசூலால் தெலுங்குத் திரையுலகம் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டது என வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE