மீண்டும் இணைந்த வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ்

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள 'ஜெயில்' படத்தை இயக்கி முடித்துள்ளார் வசந்தபாலன். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று (பிப்ரவரி 15) முதல் தொடங்கியுள்ளார் வசந்தபாலன்.

இந்தப் படத்தின் நாயகனாக அர்ஜுன் தாஸ், நாயகியாக துஷாரா விஜயன் நடித்து வருகிறார்கள். இதற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இவருடன் இசையமைப்பாளராக பணிபுரிவது குறித்து வசந்தபாலன் "16 வயதில் ஜீவியின் கையைப் பிடித்து வெயில் படத்திற்கு இசையமைக்க அழைத்து வந்தேன்.

இன்று அசுர உழைப்பால் தமிழின் முக்கியமான இசையமைப்பாளராய் , இளம் கதாநாயகனாய் எழுந்து நிற்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இசைந்த ஜீவியின் அன்புக்கு ஆயிரம் பூங்கொத்து" எனத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார் வசந்தபாலன். விருதுநகரில் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து 'அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்' என்னும் தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE